கிரிக்கெட்

பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை

பாகிஸ்தான் 40 ஓவரில் 187 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

கொழும்பு,

பாகிஸ்தான் மகளிரி கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 ஒருநாள் போட்டிகள் நடந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் இருந்தன.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

187 ரன்களுக்கு ஆல் அவுட்

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 40 ஓவரில் 187 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் பாத்திமா சனா அதிகபட்சமாக 41 ரன்கள் சேர்த்தார்.

சிறப்பாக பந்து வீசிய இலங்கை வீராங்கனைகள் விமுக்தி, சம்மரி அட்டபட்டு, கவிஷா ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இலங்கை வெற்றி

இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 37.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 191 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி அபார வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் இலங்கை மகளிர் அணி கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.