ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருபவர் சூர்யவன்ஷி. 15 வயதே ஆன சூர்யவன்ஷி, ஐபிஎல் தொடரில் சர்வதேச வீரர்களே வாய் பிளக்கும் அளவுக்கு மிரட்டி வருகிறார். உலகத்தரம் வாய்ந்த பும்ரா உள்ளிட்ட பந்துவீச்சாளர்களின் பந்துகளை அநாயசமாக சிக்சருக்கு விளாசும் சூர்யவன்ஷி, நடப்பு ஐபிஎல்லில் தற்போது வரை 2 அரைசதங்களுடன் 200 ரன்கள் விளாசியுள்ளார்.
வரும் காலத்தில் கிரிக்கெட் உலகில் யாராலும் உடைக்க முடியாத பல சாதனைகளை சூர்யவன்ஷி படைக்க கூடும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கணித்து வருகிறார்கள். சூர்யவன்ஷி சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு அவரது வயது தடையாக இருந்தது. அதாவது, ஐசிசி விதிகளின்படி 15 வயது நிரம்பியவுடன் தான் தேசிய அணிக்கு தேர்வு செய்ய முடியும். கடந்த மார்ச் 27-ம் தேதி அவருக்கு 15 வயது தொடங்கியுள்ளதால், முதல் முறையாக இந்திய அணியில் இடம் பெற தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.