துபாய்,
டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்று வரும் 26-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் பிஞ்ச் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.
இந்த ஜோடியில் வார்னர் வந்த வேகத்தில் வெளியேற அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வீரர்களும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் சற்று நிலைத்து நின்று ஆடிய அந்த அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் 49 பந்துகளை எதிர்கொண்டு 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் கிறிஸ் ஜோர்டன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், வோக்ஸ் மற்றும் மில்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனை தொடர்ந்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் சார்பில் ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. இந்த ஜோடியில் ஜேசன் ராய் 22 (20) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய டேவிட் மலான் 8 (8) ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ஜோஸ் பட்லருடன் பேர்ஸ்டோவ் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஜோடியில் அதிரடியில் மிரட்டிய பட்லர் ஆஸ்திரேலியா பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். முடிவில் ஜோஸ் பட்லர் 71 (32) ரன்களும், பேர்ஸ்டோவ் 16 (11) ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இறுதியில் இங்கிலாந்து அணி 11.4 ஒவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் அஸ்டன் அகர் மற்றும் சாம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றிபெற்றது.