மும்பை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, முன்னாள் கேப்டன் விராட் கோலியை வெகுவாக பாராட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கு கோலி அளித்த பங்களிப்பு அளவிட முடியாதது என்றும், அவரை போன்ற ஒரு வீரரை மீண்டும் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி,
"விராட் கோலி போன்ற ஒரு வீரர் இத்தனை ஆண்டுகள் நமக்காக விளையாடியது இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைத்த பெரும் பாக்கியம். அவரை போன்ற மற்றொரு வீரரை இந்திய கிரிக்கெட் மீண்டும் கண்டெடுப்பது மிகவும் கடினம்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,
"ஒரு மனிதன் நம்மோடு இருக்கும்போது தெரியாத மதிப்பு, அவர் இல்லாத போதே அதிகம் புரியும். கோலியும் அப்படிப்பட்ட ஒரு வீரர்தான். அவர் அணியில் இல்லாத காலங்களில், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் உலகம் அவருடைய மாபெரும் சாதனைகளையும் பெருமையையும் மேலும் ஆழமாக உணரும்’’என தெரிவித்துள்ளார்.
ரவி சாஸ்திரி தலைமைப் பயிற்சியாளராகவும், விராட் கோலி கேப்டனாகவும் இருந்த காலகட்டம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. இந்த கூட்டணியின் கீழ் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில், குறிப்பாக ஆஸ்திரேலியாவில், வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்து புதிய சாதனைகளை படைத்தது.