சவுத்தம்டன்,
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் மழை புகுந்து விளையாடியதால் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்று பந்து வீச்சை நியூசிலாந்து தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 64.4 ஓவர்களில் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்து.
3-ஆம் நாள் ஆட்டம் இன்று காலை துவங்கியது. ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில், விராட் கோலி 44 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அஸ்வினும் 22 ரன்களில் வெளியேறினார்.
நடுவரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேறியதால், 200-ரன்களை எட்டவே இந்திய அணி கடும் பாடு பட்டது. 92.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரகானே 49 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணியின் சார்பில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சைத் தொடங்கியது. அந்த அணியின் சார்பில் முதலாவதாக டாம் லாதம் மற்றும் தேவோன் கன்வே ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பின்னர் அணியின் ஸ்கோர் 70 ரன்களை எட்டிய நிலையில் இந்த ஜோடியில் டாம் லாதம் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து கன்வேயுடன், கேப்டன் கேன் வில்லியம்சன் ஜோடி சேர்ந்தார்.
இதனிடையே தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கன்வே, தனது அரைசதத்தை பூர்த்தி செய்திருந்தநிலையில் 54 ரன்களில் இஷாந்த் சர்மா பந்து வீச்சில், ஷமியிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
பின்னர் போதிய வெளிச்சமின்மை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஆட்டநேரமுடிவில் நியூசிலாந்து அணி 49 ஒவர்களில் 2 விக்கெட்டை இழந்து 101 ரன்கள் எடுத்திருந்தது. நியூசிலாந்து அணியில் வில்லியம்சன் 12 ரன்களும், ரோஸ் டெய்லர் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் சார்பில் ஆர்.அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
தற்போது நியூசிலாந்து அணி, இந்திய அணியை விட 116 ரன்கள் பின்தங்கி உள்ளது. நாளை நான்காம் நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.