லண்டன்,
லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்டில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை இந்தியாவின் யாஸ்திகா படைத்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்தியா 285 ரன்களும், இங்கிலாந்து 170 ரன்களும் எடுத்தன.
பின்னர் 115 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 7 விக்கெட்டுக்கு 341 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதில் யாஸ்திகா பாட்டியா தனது முதலாவது சர்வதேச சதத்தை (113 ரன், 158 பந்து, 14 பவுண்டரி) நிறைவு செய்தார்.
இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்டில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற வரலாற்று புத்தகத்தில் இடம் பிடித்தார்.
இதையடுத்து 457 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடி வரும் இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 40 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்துள்ளது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்க உள்ள நிலையில் இந்த டெஸ்டில் இந்தியா வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.