கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதல்

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இன்று சென்னையில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

தினத்தந்தி

சென்னை,

12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி மே 2-வது வாரம் வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

2011 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் உலக கோப்பை முடிந்த பிறகு தான் ஐ.பி.எல். போட்டி வந்தது. ஆனால் முதல்முறையாக இந்த ஆண்டு உலக கோப்பைக்கு முன்பாக ஐ.பி.எல். நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். முடிந்து அடுத்த இரண்டரை வாரங்களில் உலக கோப்பை போட்டி இங்கிலாந்தில் தொடங்குகிறது. அதனால் இந்த ஐ.பி.எல்.-ல் முன்னணி வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி நல்ல ஆட்டத்திறனோடு தேசிய அணிக்கு திரும்ப முயற்சிப்பார்கள். அந்த வகையில் இந்த ஐ.பி.எல். தனித்துவம் பெற்றுள்ளது.

தொடக்க லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) கோதாவில் இறங்குகின்றன.

பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த சீசனில் அம்பத்தி ராயுடு (602 ரன்), ஷேன் வாட்சன் (555 ரன்), கேப்டன் டோனி (455 ரன்), சுரேஷ் ரெய்னா (445 ரன்) ஆகியோர் பேட்டிங்கில் அளித்த கணிசமான பங்களிப்பு கோப்பையை வெல்ல உதவிகரமாக இருந்தது. இந்த முறையும் இவர்களை தான் சென்னை அணி அதிகமாக நம்பி இருக்கிறது. சென்னை அணியில் 12 வீரர்கள் 30 வயதை கடந்தவர்கள். இதில் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிருக்கு 39 வயது ஆகிறது. ஆனாலும் அவர்களின் அனுபவம் அணிக்கு அனுகூலமாக இருக்கும்.

உள்ளூரில் ரசிகர்களின் ஆரவாரம் சென்னை அணிக்கு எப்போதும் கூடுதல் உத்வேகம் அளிக்கும். காவிரி நதிநீர் பிரச்சினை போராட்டம் காரணமாக கடந்த ஆண்டில் சென்னையில் ஒரு ஆட்டம் மட்டுமே நடந்தது. எஞ்சிய ஆட்டங்கள் புனேவுக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த முறை இங்கு 7 லீக்கிலும் சென்னை அணி விளையாட இருப்பது சாதகமான அம்சமாகும்.

போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-

சென்னை: ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, டோனி (கேப்டன்), கேதர் ஜாதவ், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், டேவிட் வில்லி, மொகித் ஷர்மா அல்லது ஹர்பஜன்சிங்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்