கிரிக்கெட்

தனி ஆளாக போராடி லக்னோவுக்கு வெற்றியை அளித்த நாயகன்.! முகுல் சவுத்ரி கடந்து வந்த பாதை

கொல்கத்தா வசம் இருந்த ஆட்டத்தை தனி ஆளாக போராடி திசை திருப்பியவர் முகுல் சவுத்ரி.

கொல்கத்தா,

ஆட்ட நாயகன் முகுல் சவுத்ரி

ஐபிஎல் தொடரில் நேற்று கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணியே வெற்றிபெறும் என்ற நிலையில் இருந்தபோது, தனி ஆளாக போராடி ஆட்டத்தை திசைதிருப்பியவர் முகுல் சவுத்ரி. அவர் 27 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து லக்னோ அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இவரது ஆட்டத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், தான் கடந்து வந்த பாதை குறித்து ஆட்ட நாயகன் முகுல் சவுத்ரி கூறியது பின்வருமாறு;

தந்தையின் நம்பிக்கை

”தன் மகன் கிரிக்கெட் விளையாடுவான் என்று என் தந்தை கனவு கண்டார். ஆனால், அப்போது எங்கள் குடும்பத்தின் நிதி நிலைமை சரியாக இல்லை. நான் சுமார் 12-13 வயதில் இருந்துதான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தேன். அதன் பிறகு, நான் ஜெய்ப்பூருக்குக் குடிபெயர்ந்தேன். ஏனென்றால், நீங்கள் உயர் மட்டத்தில் விளையாட விரும்பினால், நீங்கள் முன்னேற வேண்டும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக நான் ஜெய்ப்பூரில் பயிற்சி செய்து வருகிறேன். அதன் பின்னர் 3-4 மாதங்கள் குருகிராமில் தங்கி, டெல்லியில் போட்டிகளில் விளையாடினேன். இது தற்போதைய கிரிக்கெட்டுக்கு ஏற்ப என்னை வேகமாக மாற்றிக்கொள்ள மிகவும் உதவியது. இதுதான் எனது பயணம். என்னால் கிரிக்கெட்டில் ஒரு பெரிய ஆளாக வர முடியும் என்றும், என்னால் சாதிக்க முடியும் என்றும் எனது தந்தை நம்பிக்கையுடன் இருந்தார்.” என்றார்.

போட்டியில் அழுத்தத்தை எப்படி கையாள்கிறீர்கள்? என்றும், போட்டியை வெற்றியுடன் முடித்தது குறித்தும் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்;

நம்பிக்கை

போட்டியில் அழுத்தம் இருக்கிறதுதான். ஆனால் கடவுள் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அதனால் என் திறமையின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இது நீங்கள் ஒரு பெரிய ஆளாக வர அல்லது உங்களுக்கென ஒரு பெயரை உருவாக்கிக்கொள்ள ஒரு வாய்ப்பு. அதனால் நான் அழுத்தத்தில் கவனம் செலுத்தாமல், வாய்ப்பில் கவனம் செலுத்துகிறேன்.

நான் இறுதிவரை களத்தில் இருக்க விரும்பினேன். கடைசிவரை நான் ஆட்டமிழக்காமல் இருந்தால், என்னால் ஆட்டத்தை வெல்ல முடியும் என்று என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் என் ஷாட்களை ஆடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். பந்து என் எல்லைக்குள் வந்தால், நான் அதை அடிப்பேன். மீதி, என்ன நடந்தாலும் நடக்கட்டும்.

பந்துவீச்சாளர் நான்கு கச்சிதமான பந்துகளை வீசினாலும், குறைந்தபட்சம் ஒரு பந்தாவது என் எல்லைக்குள் வரும் என்பதுதான் என் சிந்தனையாக இருந்தது. ஒரு சிக்ஸர் அடிக்க எனக்கு ஒரே ஒரு பந்துதான் தேவை. நான் அந்தப் பந்துக்காகக் காத்திருந்தேன். அது கடைசிக்கு முந்தைய பந்தாகவோ அல்லது கடைசிப் பந்தாகவோ கூட இருக்கலாம். ஆனால் அது எனக்குக் கிடைக்கும் என்று எனக்குத் தெரியும்.

சிறுவயதிலிருந்தே, நான் எப்போதும் அதிரடியாகத்தான் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன். நான் எப்போதுமே அடித்து ஆடுபவன். இப்போது என் ஆட்டத்தை நான் நன்றாகப் புரிந்துகொள்கிறேன். பந்து என் எல்லைக்குள் வந்தால், நான் அதை அடித்தே ஆக வேண்டும் என்று எனக்குத் தெரியும்.”

இவ்வாறு அவர் கூறினார்.