மும்பை,
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளராக இருப்பவர் யுஸ்வேந்திர சஹால். இவர் ஐபிஎல் தொடரில் கடந்த வருடம் வரை பெங்களூரு அணிக்காக விளையாடி வந்தார். பின்னர் இவரை பெங்களூரு அணி நிர்வாகம் தக்கவைக்காததால் இந்த வருட ஏலத்தில் ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டார்.
இந்த நிலையில் அவர் தற்போது தான் ஏலத்தில் தக்கவைக்கப்படாதது குறித்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது :
நான் பெங்களூரு அணியில் இருக்க விரும்புகிறேனா என அணி நிர்வாகம் என்னிடம் கேட்கவில்லை. அதே நேரத்தில் என்னை தக்கவைக்க விரும்புகிறார்களா எனவும் அவர்கள் தெரிவிக்கவில்லை . அவர்கள் தக்கவைத்த மூன்று வீரர்களை பற்றி மட்டுமே என்னிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஏலத்தில் என்னை எடுக்க முயற்சி செய்வதாக அணி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். என்னை எடுப்பதற்குரிய தொகை பற்றி கேட்கப்படவில்லை. தக்கவைத்துக்கொள்வதற்கான எந்த வாய்ப்பையும் நான் பெறவில்லை. ஆனால் எனது பெங்களூர் ரசிகர்களுக்கு நான் எப்போதும் விசுவாசமாக இருப்பேன். நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன்.
இவ்வாறு சஹால் தெரிவித்தார்.