கிரிக்கெட்

3வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் மகளிர் அணி 187 ரன்களுக்கு ஆல் அவுட்

டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

கொழும்பு,

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், இரு அணிகளுக்கும் இடையே நடந்த 2 ஒருநாள் போட்டிகளில் தலா 1 வெற்றியுடன் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

187 ரன்களுக்கு ஆல் அவுட்

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 40 ஓவரில் 187 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் பாத்திமா சனா அதிகபட்சமாக 41 ரன்கள் சேர்த்தார். அவருக்கு அடுத்தபடியாக குல் பெரொசா 40 ரன்களும், முனிபா அலி 34 ரன்களும் சேர்த்தனர்.

சிறப்பாக பந்து வீசிய இலங்கை வீராங்கனைகள் விமுக்தி, சம்மரி அட்டபட்டு, கவிஷா ஆகியோர் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கி விளையாடி வருகின்றனர்.