நத்தம்,
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் திருச்சி அபாரமாக பேட்டிங் ஆடி மதுரைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.
10-வது டிஎன்பிஎல் (TNPL) 20 ஓவர் கிரிக்கெட் தொடர் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் திருப்பூர் தமிழன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று நடைபெற்ற தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான திருப்பூர் தமிழன்ஸ் அணியை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீழ்த்தி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியது.
இன்று (புதன்கிழமை) 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி, தொடங்கிய முதல் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டிக்கான டாஸை வென்ற மதுரை பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து, திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஜெயராமன் சுரேஷ்குமார் 18 பந்துகளில் 43 ரன்கள், சஞ்சய் யாதவ் ஆட்டமிழக்காமல் 37 ரன்கள், ஆர். ராஜ்குமார் 19 பந்துகளில் 35 ரன்கள், கே. ராஜ்குமார் 24 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை பாந்தர்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் தீவிரமாக போராடி வருகின்றன.