கிரிக்கெட்

டிஎன்பிஎல்: சேலத்தை வீழ்த்தி திண்டுக்கல் அபார வெற்றி

மழையால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

திண்டுக்கல்,

10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இத்தொடரில் இன்று நடைபெற்ற 18வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. மழையால் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

239 ரன்கள் குவிப்பு

இதையடுத்து முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணி 15 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 239 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் பாபா இந்திரஜித் 25 பந்துகளில் 73 ரன்கள் குவித்தார். சேலம் தரப்பில் அந்த அணியின் விவேக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

திண்டுக்கல் வெற்றி

இதனை தொடர்ந்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய சேலம் 15 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சேலத்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி திண்டுக்கல் அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய திண்டுக்கல் வீரர் அருள் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.