சென்னை,
8 அணிகள் பங்கேற்றுள்ள 10வது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இத்தொடரின் முதல்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தொடரின் 2ம் கட்ட போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
அதன்படி, புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தன. இதில் நேற்று மதுரை, திருச்சி இடையே நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றுப்போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து புள்ளிகள் அடிப்படையில் மதுரை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று (வெளியேற்றுதல்) ஆட்டத்தில் கோவை கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோத உள்ளன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தகுதிச்சுற்றுப்போட்டி 2ல் திருச்சியை எதிர்கொள்ளும். இன்றைய போட்டியில் தோல்வியடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.