கிரிக்கெட்

டி.என்.பி.எல்.: முதலாவது தகுதிசுற்று மழையால் ரத்து...மதுரை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

சென்னை,

10-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வரு கிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த மதுரை பாந்தர்ஸ் (10 புள்ளி), திருச்சி கிராண்ட் சோழாஸ் (10), கோவை கிங்ஸ் (8). திருப்பூர் தமிழன்ஸ் (8) ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற் றுக்குள் நுழைந்தது.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மதுரை பாந்தர்சும், திருச்சி கிராண்ட்சோழாசும் நேற்றிரவு மோதின. 'டாஸ்' ஜெயித்த மதுரை கேப்டன் அனிருத் முதலில் திருச்சியை பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து முதலில் பேட் செய்ய களம் புகுந்த திருச்சி அணி 2.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 25 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. ஏறக்குறைய 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் போட்டி 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து ஆடிய திருச்சி அணி 4.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் பலத்த மழை கொட்டியது. அப்போது கே.ராஜ்குமார் (38 ரன்), ஷியாம் சுந்தர் (3 ரன்) களத்தில் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டத்தை நடத்த முடியவில்லை. அத்துடன் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகித்த அணி என்ற அடிப்படையில் மதுரை பாந்தர்சுக்கு இறுதிப்போட்டி அதிர்ஷ்டம் அடித்தது. என்றாலும் திருச்சிக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் ஆடும்.

இதே மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு அரங்கேறும் வெளியேற்றுதல் சுற்றில் கோவை கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இந்த ஆட்டமும் மழையால் பாதிக்க வாய்ப்புள்ளது.