திண்டுக்கல்,
இன்று நடைபெற்ற 17வது லீக் ஆட்டத்தில் திருச்சி அணி திருப்பூரை வீழ்த்தியது.
10வது டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இத்தொடரின் முதற்கட்ட போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் எம்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்ற 17வது லீக் ஆட்டத்தில் திருச்சி - திருப்பூர் அணிகள் மோதின. இந்த போட்டிக்கான டாஸை வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்தது. ஷியாம் சுந்தர் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
இதையடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்கியது.தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், துஷார் ரஹேஜா அதிரடியாக விளையாடி திருப்பூர் அணியின் வெற்றிக்காக போராடினார்.
வெறும் 43 பந்துகளில் 87 ரன்கள் விளாசினார். அவருக்கு ப்ரதோஷ் ரஞ்சன் பால் நல்ல ஒத்துழைப்பு அளித்து 36 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார்.
இருப்பினும் அந்த அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. திருப்பூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.