கிரிக்கெட்

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: அரையிறுதிக்கு தகுதிபெற்ற ஆப்கானிஸ்தான்..!

ஜூனியர் உலக கோப்பை போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

தினத்தந்தி

ஆன்டிகுவா,

16 அணிகள் இடையிலான 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது.

இந்நிலையில், குரூப் சி பிரிவில் இரண்டாம் இடம் பிடித்த ஆப்கானிஸ்தான் அணியும், குரூப் டி பிரிவில் முதல் இடம் பிடித்த இலங்கை அணியும் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 47.1 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அப்துல் ஹாதி 37 ரன்னும், நூர் அகமது 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக வினுஜா ரான்பால் 5 விக்கெட் வீழ்த்தினார். இதனைத்தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால் ஆப்கானிஸ்தான் அணியினரின் அசத்தலான பீல்டிங்கில் இலங்கை அணி சிக்கியது.

இலங்கை அணியின் சார்பில் துனித் வெல்லலகே அதிகபட்சமாக 31 ரன் எடுத்தார். 45வது ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இலங்கை அணி 6 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்த ஆட்டத்தில் 4 பேர் ரன் அவுட்டாகினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் 4 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. முன்னதாக இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினர் இலங்கை அணிக்கு 34 ரன்கள் எக்ஸ்ட்ராவாக விட்டுக் கொடுத்திருந்தனர்.

ஆப்கானிஸ்தான் சார்பில் பிலால் சமி 2 விக்கெட், நூர் அகமது, நவீத் சட்ரான், இஜாருல்லா நவீத் மற்றும் கரோடே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமது 30 ரன்கள் மற்றும் ஒரு விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு