மும்பை,
இந்திய யு-19 அணியில் ஷேவாக், டிராவிட் மகன்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளநிலையில், வைபவ் சூர்யவன்ஷி இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
19 வயதுக்குட்பட்டோருக்கான (U-19) ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தத் தொடரில் இரு அணிகளும் 3 ஒருநாள் மற்றும் 2 நான்கு நாள் போட்டிகளில் விளையாட உள்ளன.
ஒருநாள் போட்டிகள் செப்டம்பர் 18, 21 மற்றும் 23 ஆகிய தேதிகளில் ராஜ்கோட்டில் நடைபெற உள்ளன. இதற்கான இந்திய யு-19 ஒருநாள் அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
லக்சயா ரைசந்தானி தலைமையிலான இந்திய யு-19 ஒருநாள் அணியில் முன்னாள் இந்திய கேப்டனும், பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வய் டிராவிட், முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர ஷேவாக்கின் மகன் ஆர்யவீர் ஷேவாக் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இருவரும் இந்திய யு-19 அணியில் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. அதேவேளையில், இளம் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் பெயர் அணியில் இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
15 வயதான வைபவ் சூர்யவன்ஷி, சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த யு-19 தொடருக்கான அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதற்கு பிசிசிஐ-யின் யு-19 விதிமுறையே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
2016-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள விதிமுறையின்படி, ஒரு வீரர் தகுதி பெற்றிருந்தாலும், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரே ஒரு யு-19 உலகக் கோப்பை தொடரில் மட்டுமே பங்கேற்க முடியும்.
வைபவ் சூர்யவன்ஷி ஏற்கனவே 2026 யு-19 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளதால், எதிர்கால யு-19 தொடர்களுக்கான பிசிசிஐ திட்டங்களில் அவர் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே விதிமுறையின் காரணமாகவே இந்திய ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரால் 2018 யு-19 உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
1-வது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 18 - ராஜ்கோட்
2-வது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 21 - ராஜ்கோட்
3-வது ஒருநாள் போட்டி: செப்டம்பர் 23 - ராஜ்கோட்
1-வது நான்கு நாள் போட்டி: செப்டம்பர் 27 முதல் 30 வரை - ராஜ்கோட்
2-வது நான்கு நாள் போட்டி: அக்டோபர் 5 முதல் 8 வரை - அகமதாபாத்