கிரிக்கெட்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான வெற்றி: ஷ்ரேயாஸ் அய்யர் கூறியது என்ன ?

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என தொடரை வென்றது.

ஹராரே,

ஜிம்பாப்வேக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஹராரேயில் நடந்த முதலாவது ஆட்டத் தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா- ஜிம்பாப்வே இடையிலான 2-வது டி20 போட்டி அதே ஹராரேயில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிகந்தர் ராசா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அபிஷேக் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அதன்பிறகு களமிறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களை சிதறடித்தார். பவுண்டரிகள், சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர், சிறப்பான அரைசதம் விளாசி இந்திய அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். மறுமுனையில் திலக் வர்மா பொறுப்புடன் பேட்டிங் செய்து அரைசதம் கடந்து இஷான் கிஷனுக்கு சிறந்த ஒத்துழைப்பை வழங்கினார்.இஷான் கிஷான் 81 ரன்களில் ஆட்டமிழந்தார். திலக் வர்மா 60 ரன்கள் எடுத்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது.

220 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர்.ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியவில்லை. அந்த அணி 17.5 ஓவர்களில் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என தொடரை வென்றது.

இந்திய அணி வெற்றி தொடர்பாக அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் தனது கூறியதாவது,

இன்றைய வெற்றியால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அனைத்து வீரர்களின் சிறப்பான பங்களிப்பால் இது ஒரு முழுமையான வெற்றியாக அமைந்தது. ஒவ்வொரு வீரரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர்.

பேட்டிங் குறித்து:

முதலில் பேட்டிங்கை எடுத்துக்கொண்டால், இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. அவர்கள் விளையாடிய சில ஷாட்கள் மிகவும் அழகாகவும், பார்ப்பதற்கு விருந்தாகவும் அமைந்தன. தொடக்கத்தில் 180 முதல் 200 ரன்கள் வரை எடுத்தாலே நல்ல ஸ்கோராக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் நாங்கள் 220 ரன்கள் குவித்தோம். அது கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது. இஷான் மற்றும் திலக் இருவரின் பங்களிப்பும் சிறப்பானது.

பந்துவீச்சு குறித்து:

பந்துவீச்சிலும் எப்போதும் போல வீரர்கள் தங்களது பந்துவீச்சு திட்டத்தை சரியாக செயல்படுத்தினர். ஜிம்பாப்வே அணியை 130 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர்.

இளம் வீரர்களின் அணுகுமுறை குறித்து:

"இதுதான் போட்டியை அணுக வேண்டிய முறை. எல்லாமே அணுகுமுறை மற்றும் மனநிலையை பொறுத்தது. கடந்த போட்டிகளில் நடந்தவற்றை அதிகம் நினைத்து கொண்டிருக்கக் கூடாது. எப்போதும் முன்னோக்கி செல்ல வேண்டும். முக்கியமாக தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்த வேண்டும். கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமையாக பயன்படுத்த வேண்டும்."

அடுத்த போட்டி குறித்து:

இறுதி டி20 போட்டிக்கான அணியில் மாற்றங்கள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. பயிற்சியாளருடன் பேசவில்லை. துரதிர்ஷ்டவசமாக பிரின்ஸ் காயம் அடைந்துள்ளார். அதனால் அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம்" என்று தெரிவித்தார்.