புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மன்னன் என்று எல்லோராலும் வர்ணிக்கப்பட்ட முன்னாள் துவக்க ஆட்டக்காரர் சேவாக், கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் டுவிட்டரில் தனது நகச்சுவையான பதிவுகளால் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அந்த வகையில், சேவாக், டெய்லருக்கு ஆதார் எண் பெற முடியுமா என்று ட்விட்டரில் கேலி செய்துள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல்நாள் போட்டியில், நியூஸிலாந்து அணி அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது. இதுகுறித்து சேவாக், டெய்லர் என்ற பெயரை உருதில் மொழி பெயர்த்து தையல்காரர் என்ற பொருள் கொள்ளும் வகையில் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்,.
இதற்கு இந்தியில் பதிலளித்த நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர், ''ராஜ்கோட் போட்டிக்குப் பிறகு டெய்லர் கடை மூடப்பட்டுள்ளது என்றும் அடுத்த தையல் பணி திருவனந்தபுரத்தில் ஆரம்பிக்க உள்ளது. அவசியம் வாருங்கள்'' என்றும் பதில் டுவிட் கொடுத்தார். இதைக் குறிப்பிட்டு சேவாக், ''டெய்லரின் சிறப்பான இந்திப் புலமைக்கு அவரால் ஆதார் எண்ணைப் பெற முடியுமா?'' என்று ஆதார் நிறுவனத்திடம் டுவிட்டரில் கேள்வி கேட்டார்.
இதற்கு பதிலளித்த ஆதார் நிறுவனம், ''மொழி பிரச்சினையல்ல. ஆதார் பயனரின் குடியுரிமையே முக்கியம்'' என்று தெரிவித்துள்ளது.மீண்டும் சேவாக், தனது டுவிட்டர் பக்கத்தில் ''எவ்வளவு வேடிக்கைகளைப் பார்த்தாலும், கடைசியில் அரசாங்கத்தின் வேடிக்கைதான் சிரிப்பை வரவழைக்கிறது'' என்று தெரிவித்துள்ளார் .