புதுடெல்லி,
1999-ம் ஆண்டு இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்காக இந்திய வீரர்கள் பலர் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர். கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களின் உயிர் தியாகத்தை நினைவு கூறும்வகையில் ஒவ்வெரு ஆண்டும் ஜூலை மாதம் 26ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி, இன்று டுவிட்டர் மூலம் நாட்டுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ராணுவ வீரர்களின் வீரம் மற்றும் தியாகத்தால் நாடு பாதுகாப்பாக உள்ளதை நினைவு கூற வேண்டும் என்று ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். அதேபோல்,சச்சின் தெண்டுல்கர், சேவாக், அனில் கும்பிளே உள்ளிட்ட பிரபலங்களும் ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து தங்கள் மரியாதையை செலுத்தியுள்ளனர்.
சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், கார்கில் போரில் வெற்றி பெற்று 18 ஆண்டுகள் ஆகியுள்ளது. தேசத்துக்காக உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.உண்மையான ஹீராக்களான நமது ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு தலைவணங்குகிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தெண்டுல்கர் டுவிட்டரில் கூறுகையில், கார்கில் போரில் ஈடுபட்ட நமது துணிச்சல் மிக்க வீரர்களுக்கும் நமது நாட்டை ஒவ்வொரு நாளும் பாதுகாத்து வரும் வீரர்களுக்கும் நான் தலைவணங்குகிறேன் இவ்வாறு கூறியுள்ளார்.
ஹர்பஜன்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- வீரர்கள் தியாகத்தை ஒருபோதும் மறக்க மாட்டோம். நமக்கு பாதுகாப்பாக உள்ள அனைத்து ராணுவ வீரர்களுக்கும் வணக்கத்தை செலுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.