கேப்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்த தொடரில், செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. இதனால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் வருகிற 11-ந் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் ஒரு பேட்டியில் கூறும்போது, ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த டெஸ்ட் போட்டியில் வென்றதன் மூலம் நாங்கள் சரியான திசையில் பயணிக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. இது ஒரு நேர்மறையான நகர்வாகும். அடுத்து வரும் டெஸ்ட் போட்டி உள்ளிட்ட சவால்கள் எங்களுக்கு எதிர்நோக்கி இருக்கிறது. அடுத்து சந்திக்கும் சூழ்நிலைகளை எங்களது வீரர்கள் எப்படி? எதிர்கொள்கிறார்கள் என்பது முக்கியமானதாகும். கேப்டவுன் டெஸ்ட் போட்டிக்கு முன்பு சில விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் எங்களது திட்டத்தில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். அதேநேரத்தில் அடுத்த டெஸ்டில் எங்களது ஆட்ட வியூகத்தில் அதிக மாற்றம் செய்ய வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்' என்று தெரிவித்தார்.