மும்பை,
இம்பேக்ட் பிளேயர் விதிமுறையை தொடர்ந்து அமல்படுத்தலாமா? அல்லது நீக்கலாமா? என்பது குறித்து ஐபிஎல் அணிகளிடம் பிசிசிஐ கருத்து கேட்ட நிலையில் அந்த கருத்துகளை ஐபிஎல் அணிகள் வழங்கியுள்ளன.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கடந்த 2023-ம் ஆண்டு இம்பேக்ட் பிளேயர் விதிமுறை (தாக்கத்தை ஏற்படுத்தும் வீரர்) அமல்படுத்தப்பட்டது. பந்துவீச்சு அல்லது பேட்டிங்குக்கு யாராவது ஒரு வீரரை ஆட்டத்தின் ஒரு பகுதியில் மாற்றிக் கொள்ளலாம் என்று இந்த விதி கூறுகிறது. இந்த விதிமுறை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, இம்பேக்ட் பிளேயர் விதிமுறையால் கடைசி ஐபிஎல் தொடரில் அணிகள் 200 ரன்களை சுலபமாக கடந்தன. இந்த விதி பேட்ஸ்மேன்களுக்கு சாதமகாகவும், பந்து வீச்சாளர்களுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதேவேளை, சச்சின், விராட், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், சுப்மன் கில் உள்பட பல்வேறு வீரர்கள் இம்பேக்ட் பிளேயர் விதியை நீக்க வேண்டும் என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, இம்பேக்ட் பிளேயர் விதிமுறை, பயிற்சி ஆட்டங்கள், நடுவர்கள் தீர்ப்பு முறை, போட்டி சூழல்கள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க ஐபிஎல் அணி நிர்வாகங்களுக்கு பிசிசிஐ கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், பிசிசிஐ நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று இம்பேக்ட் பிளேயர் விதிமுறை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள 10 அணிகளின் நிர்வாகமும் கருத்து தெரிவித்துள்ளன. இந்த அணிகள் அளித்த கருத்துகளின் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயர் விதியை தொடர்ந்து அமல்படுத்துவதா? அல்லது நீக்குவதா? என்பது குறித்து பிசிசிஐ விரைவில் முடிவெடுத்து அதற்கான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.