கொழும்பு,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசியது.
நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்றுப்போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் ஜாக்ஸ், 'ஆட்டநாயகன்' விருதை வென்றார்.
இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருதுகளை (மொத்தம் 4 விருதுகள்) வென்ற வீரர் என்ற சாதனையை வில் ஜாக்ஸ் படைத்துள்ளார்.
இதன் மூலம் கெவின் பீட்டர்சன், லூக் ரைட், ஜோஸ் பட்லர் மற்றும் அடில் ரஷித் (தலா 3 விருதுகள்) ஆகியோரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
மேலும் ஒரு குறிப்பிட்ட உலகக் கோப்பை தொடரில் அதிகபட்சமாக 4 ஆட்டநாயகன் விருதுகளை வென்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வாட்சனின் (2012-ல் படைத்த சாதனை) உலக சாதனையை வில் ஜாக்ஸ் தற்போது சமன் செய்துள்ளார்.