கிரிக்கெட்

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தினத்தந்தி

பிரிஸ்டல்,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. பிரிஸ்டலில் நடந்த அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்தது.

இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் பிரிஸ்டலில் இன்று தொடங்கியது.

இதில், டாஸ் வென்ற கேப்டன் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதுபற்றி கூறிய இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ், நாங்கள் முதலில் பந்துவீச விரும்பினோம். ஆனால், சவாலை ஏற்று கொள்வதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைத்துள்ளது.

எங்களுடைய தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல அடித்தளம் அமைத்து விட்டார்கள் என்றால் பின்னர் ஆட்டம் எங்கள் வசப்பட்டு விடும் என கூறினார்.

இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மந்தனா (10) மற்றும் ஷெபாலி (15) குறைந்த அளவிலான ரன்களில் வெளியேறினர். அடுத்து வந்த பூனம் சற்று நிலைத்து ஆடி 4 பவுண்டரிகள் விளாசி 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து உள்ளார்.

ஆனால், கேப்டன் மிதாலி ராஜ் அதிரடியாக அடித்து ஆடினார். அவர் 41.1வது ஓவரில் பவுண்டரி விளாசி அரை சதம் கடந்துள்ளார். இங்கிலாந்தில் 50 ரன்களுக்கு மேல் அவர் எடுத்துள்ளது இது 13வது முறையாகும். அவருக்கு முன் சார்லட் எட்வார்ட்ஸ் 22 அரை சதங்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார்.

எனினும், 45வது ஓவரில் எக்ளெஸ்டோன் வீசிய 3வது பந்தில் மிதாலி ராஜ் 72 ரன்கள் (108 பந்துகள், 7 பவுண்டரிகள்) எடுத்த நிலையில் போல்டானார். அதன்பின் ஹர்மன்பிரீத் (1), தீப்தி (30), பூஜா (15) தன்யா (7) ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்திய பெண்கள் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்திருந்தது. ஷிகா (3) மற்றும் ஜூலன் (1) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற 202 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இங்கிலாந்து தரப்பில் எக்ளெஸ்டோன் 3 விக்கெட்டுகளையும், கேத்தரின் மற்றும் ஆன்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளனர்.

இதனை தொடர்ந்து இங்கிலாந்து விளையாடியது. அந்த அணியின் லாரன் 16 ரன்களில் வெளியேறினார். ஆனால், மற்றொரு தொடக்க ஆட்ட வீராங்கனையான டேமி 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

கேப்டன் நைட் 18 ரன்களில் ஆட்டமிழந்து உள்ளார். அவரை தொடர்ந்து விளையாட வந்த ஸ்சிவெர் 74 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். டேமி மற்றும் ஸ்சிவெர் ஆகிய இருவரும் தலா ஒரு சிக்சர் அடித்து உள்ளனர். இருவரும் ரன்களுக்கு இணையான பந்துகளை சந்தித்து உள்ளனர்.

அந்த அணி 34.5 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இங்கிலாந்து 202 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், இந்திய அணியை இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்