பிரிஸ்டல்,
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. பிரிஸ்டலில் நடந்த அந்த நாட்டு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி டிரா செய்தது.
இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் பிரிஸ்டலில் இன்று தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற கேப்டன் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
இதுபற்றி கூறிய இந்திய பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ், நாங்கள் முதலில் பந்துவீச விரும்பினோம். ஆனால், சவாலை ஏற்று கொள்வதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைத்துள்ளது.
எங்களுடைய தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல அடித்தளம் அமைத்து விட்டார்கள் என்றால் பின்னர் ஆட்டம் எங்கள் வசப்பட்டு விடும் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மந்தனா (10) மற்றும் ஷெபாலி (15) ரன்களில் வெளியேறினர். அடுத்து வந்த பூனம் சற்று நிலைத்து ஆடி 4 பவுண்டரிகள் விளாசி 32 ரன்களில் ஆட்டமிழந்து உள்ளார்.
ஆனால், கேப்டன் மிதாலி ராஜ் அதிரடியாக அடித்து ஆடினார். அவர் 41.1வது ஓவரில் பவுண்டரி விளாசி அரை சதம் கடந்துள்ளார். இங்கிலாந்தில் 13வது முறையாக 50 ரன்களுக்கு மேல் அவர் எடுத்துள்ளார். அவருக்கு முன் சார்லட் எட்வார்ட்ஸ் 22 அரை சதங்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார்.
எனினும், 45வது ஓவரில் எக்ளெஸ்டோன் வீசிய 3வது பந்தில் மிதாலி ராஜ் 72 ரன்கள் (108 பந்துகள், 7 பவுண்டரிகள்) போல்டானார். அதன்பின் ஹர்மன்பிரீத் (1), தீப்தி (30), பூஜா (15) தன்யா (7) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இந்திய பெண்கள் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 201 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகா (3) மற்றும் ஜூலன் (1) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து அணி வெற்றி பெற 202 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இங்கிலாந்து தரப்பில் எக்ளெஸ்டோன் 3 விக்கெட்டுகளையும், கேத்தரின் மற்றும் ஆன்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளனர்.