லண்டன்,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி லண்டன் ஓவலில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சோபியா டங்க்லி 75 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அருந்ததி ரெட்டி, தீப்தி சர்மா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 166 ரன் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 5 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து திரில் வெற்றி பெற்றது.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக மந்தனா 56 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில் லாரன் பைலர் 2 விக்கெட் வீழ்த்தினார். இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி வரும் 9ம் தேதி நடக்கிறது.