கிரிக்கெட்

பெண்கள் டி20: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

3 போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது.

அடிலெய்டு,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 21 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 19 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி அடிலெய்டில் இன்று நடந்தது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹாமன்பிரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் மந்தனா அதிகபட்சமாக 82 ரன்களும், ஜெமிமா 59 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் அனபெல் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் தொடக்கம் முதலே தடுமாடினர். அஷ்லீ அதிகபட்சமாக 57 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்களே எடுக்க முடிந்தது.

இதன் மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. அத்துடன், 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்திய அணி தரப்பில் ஸ்ரீ சரணி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.