கவுகாத்தி,
கொரோனாவல் ஒத்திவைக்கப்பட்ட ரஞ்சி டிராபி போட்டிகள் தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது. இதில் கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு-டெல்லி அணிகள் மோதின.
இந்த போட்டியில் ஜூனியர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் கேப்டன் யாஷ் துல் ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக தனது அறிமுக போட்டியில் விளையாடினார்.
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அவர், முதல் இன்னிங்சில் சதம் அடித்து அசத்தினார். முதல் இன்னிங்சில் 113 ரன்களில் அவுட்டான அவர் இரண்டாம் இன்னிங்சிலும் தனது அபார திறமையை வெளிப்படுத்தி சதம் (113*) அடித்தார். இந்த சதத்தின் மூலம் அவர் புதிய சாதனையை படைத்துள்ளார்.
அதாவது ரஞ்சி டிராபியில் அறிமுக போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் சதமடித்த 3-ஆவது வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரானார் யாஷ்துல்.
இதற்கு முன்பு நாரி கான்ட்ராக்டர், குஜராத் அணிக்காகவும், விராக் அவதே மகாராஷ்டிரா அணிக்காகவும் விளையாடி இந்த சாதனையை படைத்தது குறிப்படத்தக்கது.