அட்லாண்டா,
உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றின் மிக சிறந்த இரு அணிகளான இங்கிலாந்தும் அர்ஜென்டினாவும், 20 ஆண்டுகளுக்கு பிறகு நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் மீண்டும் மோதுகின்றன.
உலகக் கோப்பை வரலாற்றில் இங்கிலாந்தும் அர்ஜென்டினாவும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 3 போட்டிகளிலும், அர்ஜென்டினா 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளும் முதன்முதலாக 1962 உலகக் கோப்பை குரூப் சுற்றில் மோதின. அந்தப் போட்டியில் இங்கிலாந்து 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
1966-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் வெம்ப்லி மைதானத்தில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பல சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறின. இதுதான் இரு அணிகளுக்கும் இடையிலான பகைக்கு அடித்தளம் அமைத்ததாக கருதப்படுகிறது.
1986 உலகக் கோப்பை காலிறுதியில் மெக்ஸிகோ சிட்டியின் அஸ்டெகா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டம் கால்பந்து வரலாற்றில் அழியாத இடத்தை பெற்றது. அந்தப் போட்டியில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அர்ஜெண்டினாவின் டியாகோ மாரடோனா அடித்த முதல் கோல், சர்ச்சையை ஏற்படுத்தியது.
1998 உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றில் நடைபெற்ற ஆட்டம் 2-2 என்ற சமநிலையில் முடிந்தது. பின்னர் நடந்த பெனால்டி ஷூட்-அவுட்டில் அர்ஜென்டினா 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
2002 உலகக் கோப்பை குரூப் சுற்றில் டேவிட் பெக்காம் அடித்த பெனால்டி கோலால் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதுவே உலகக் கோப்பையில் இவ்விரு அணிகள் கடைசியாக மோதிய போட்டியாகும்.
2005-ம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற நட்பு ஆட்டத்தில் இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அப்போது 18 வயதான லியோனல் மெஸ்சி, ஹங்கேரிக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியில் சிவப்பு அட்டை பெற்றதால் அந்த போட்டியில் விளையாடவில்லை.
இதனால், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சர்வதேச கால்பந்தில் விளையாடி வரும் லியோனல் மெஸ்சி, தனது நீண்ட கால சர்வதேச வாழ்க்கையில் இதுவரை ஒருமுறைகூட இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்காதது ஒரு ஆச்சரியமான சாதனையாக பதிவாகியுள்ளது. தற்போது முதல்முறையாக இங்கிலாந்துக்கு எதிராக மெஸ்சி களமிறங்க உள்ளார்.
இந்நிலையில், உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றின் மிகப் பெரிய அணிகளான இங்கிலாந்தும் அர்ஜென்டினாவும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பை தொடரில் மீண்டும் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த அரையிறுதிப் போட்டி உலக கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.