கால்பந்து

கோலாகலமாக தொடங்கிய உலகக்கோப்பை கால்பந்து தொடர் - ரசிகர்கள் உற்சாகம்

முதல் லீக் ஆட்டத்தில் மெக்சிகோ - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

மெக்சிகோ சிட்டி,

உலகில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு தொடராக உலகக்கோப்பை கால்பந்து தொடர் உள்ளது. 48 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மெக்சிகோ, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

பிபா உலகக்கோப்பை கால்பந்து

இந்நிலையில், உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடக்க விழா மெக்சிகோ நாட்டின் மெக்சிகோ சிட்டியில் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. வண்ணமயமான வாணவேடிக்கைகளுடன், கலைநிகழ்ச்சிகளுடனும் உலகக்கோப்பை கால்பந்து தொடர் தொடங்கியுள்ளது. தொடக்க விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல், உலகம் முழுவதிலும் இருந்து உலகக்கோப்பை கால்பந்து தொடரின் தொடக்க விழாவை டிவி, இணையதளம் வாயிலாக கோடிக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக கண்டு களித்து வருகின்றனர்.

இந்தியாவில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் யுனைட் 8 ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்புகின்றன.

உலகக்கோப்பை கால்பந்து தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சற்று நேரத்தில் (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு) நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் மெக்சிகோ - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இதையடுத்து நாளை காலை 7.30 மணிக்கு நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் தென்கொரியா - செக் குடியரசு மோத உள்ளன.

இதனிடையே, உலகக்கோப்பை கால்பந்து தொடர் 3 நாடுகளில் நடைபெற உள்ள நிலையில் 3 நாடுகளிலும் தனித்தனியே தொடக்க விழா நடைபெறுகிறது. அதன்படி, மெக்சிகோவில் இன்று தொடக்க விழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து, கனடா, அமெரிக்காவில் நாளையும் தொடக்க விழா நடைபெற உள்ளது.