பிலடெல்பியா,
பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹைதியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள பிரேசில் மற்றும் ஹைதி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் பிலடெல்பியாவில் நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரேசில் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அபார வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் மதேயுஸ் குன்ஹா கோல் அடித்து அணியை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற செய்தார். தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரேசிலுக்கு 36-வது நிமிடத்தில் மீண்டும் குன்ஹா கோல் அடித்து முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார்.
முதல் பாதி முடிவடையும் தருணத்தில், பிரேசில் நட்சத்திர வீரர் வினீசியஸ் ஜூனியர் அணிக்கான 3-வது கோலை பதிவு செய்தார். இதன் மூலம் முதல் பாதி முடிவில் பிரேசில் அணி 3-0 என்ற கணக்கில் வலுவான முன்னிலையை பெற்றது.
இரண்டாவது பாதியில் கோல் அடித்து போட்டிக்குள் மீண்டும் வர ஹைதி அணி தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்தியது. ஆனால் பிரேசில் அணியின் தடுப்பாட்டம் காரணமாக அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை.
இரண்டாம் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில், ஆட்ட நேர முடிவில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஹைதியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. மதேயுஸ் குன்ஹா அடித்த இரட்டை கோல் பிரேசிலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.