கான்சாஸ் சிட்டி,
உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'எப்' பிரிவு லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி, துனிசியாவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்திய நேரப்படி இன்று காலை 4.30 மணிக்கு கான்சாஸ் சிட்டியில் நடைபெற்ற இந்த போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்தது. ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் துனிசியா வீரர் எல்லீஸ் ஸ்கிரி தவறுதலாக ஓன் கோல் அடித்ததால் நெதர்லாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
அதன் பின்னர் 7-வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் பிரையன் ப்ரோபி கோல் அடித்து அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார். இதன்பிறகு இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், முதல் பாதியில் மேலும் கோல் எதுவும் பதிவாகவில்லை.
இரண்டாவது பாதியில் துனிசியா அணி தீவிரமாக தாக்குதல் நடத்த தொடங்கியது. அதன் பலனாக 54-வது நிமிடத்தில் ஹசெம் மஸ்தூரி கோல் அடித்து அணிக்கான முதல் கோலை பதிவு செய்து, கோல் வித்தியாசத்தை 2-1 ஆக குறைத்தார்.
துனிசியாவின் பதிலடிக்கு பின்னர் மீண்டும் தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்த நெதர்லாந்து, 62-வது நிமிடத்தில் ஜான் பால் வான் ஹெக்கே கோல் அடித்து முன்னிலையை 3-1 ஆக உயர்த்தியது. மீதமுள்ள நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க போராடினாலும், கூடுதல் கோல்கள் எதுவும் பதிவாகவில்லை. இறுதியில், நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் துனிசியாவை வீழ்த்தியது.