கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து - கோல் அடித்தும் கொண்டாடாத வீரர்... பின்னணியில் இருக்கும் உணர்வுப்பூர்வ காரணம்

பொதுவாக உலகக் கோப்பை போன்ற பெரிய மேடைகளில் கோல் அடிக்கும் வீரர்கள் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம்.

சென்னை,

23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் துனிசியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சுவீடன் அணியின் 22 வயதான இளம் வீரர் யாசின் அயாரி இரட்டை கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கோல் அடித்தும் ஆர்ப்பாட்டம் இல்லை

பொதுவாக உலகக் கோப்பை போன்ற பெரிய மேடைகளில் கோல் அடிக்கும் வீரர்கள் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். ஆனால் யாசின் அயாரி கோல் அடித்த பிறகு அதிகப்படியான மகிழ்ச்சியை வெளிப்படுத்தவில்லை.

அதற்கு பதிலாக இரு கைகளையும் கூப்பி வணங்கி அமைதியாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த செயல் ரசிகர்களிடையே கவனத்தை பெற்றது.

பின்னணியில் இருந்த உணர்வுப்பூர்வ காரணம்

யாசின் அயாரியின் தந்தை துனிசியாவில் பிறந்தவர். அவரது தாயார் மொராக்கோ நாட்டை சேர்ந்தவர். ஆனால் யாசின் அயாரி சுவீடன் நாட்டில் பிறந்து வளர்ந்தவர். அவருக்கு துனிசியா (அ) மொராக்கோ அணிக்காக சர்வதேச கால்பந்தில் விளையாடும் வாய்ப்பு இருந்தபோதிலும், தன்னை வளர்த்து ஆளாக்கிய சுவீடன் நாட்டிற்காகவே விளையாட முடிவு செய்தார்.

தந்தையின் வேர்களுக்கு செலுத்திய மரியாதை

துனிசியா அவரது தந்தையின் பூர்வீக நாடு என்பதால், அந்த அணிக்கு எதிராக கோல் அடித்தபோது கொண்டாட்டத்தில் ஈடுபட விரும்பவில்லை. தந்தையின் தாயகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே அவர் அமைதியாக கொண்டாடியுள்ளார்.

ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற செயல்

கால்பந்தில் எதிரணிக்கு மரியாதை செலுத்தும் வகையில் கோல் கொண்டாட்டத்தை தவிர்ப்பது அரிதான ஒன்று. குறிப்பாக உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் இப்படிப்பட்ட செயலை வெளிப்படுத்திய யாசின் அயாரிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கோல்களால் மட்டுமல்ல, தனது பணிவும் குடும்பத்தின் மீதான மரியாதையும் காரணமாக யாசின் அயாரி உலகக் கோப்பையில் பலரது மனதையும் வென்றுள்ளார்.