கால்பந்து

நீச்சல் குளத்தில் மூழ்கிய கால்பந்து வீரர் - தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

இத்தாலியில் கோபா இத்தாலியா என்ற கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது.

ரோம்,

இத்தாலியில் கோபா இத்தாலியா என்ற கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. கிளப் அளவில் நடைபெற்று வரும் இந்த கால்பந்து தொடரில் ஏராளமான கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.

இத்தொடரில் காக்லியாரி கால்சியோ அணியில் பிரான்சை சேர்ந்த 20 வயதான யேல் டிரெப்பி என்ற இளம் கால்பந்து வீரர் இடம்பெற்றிருந்தார். அவர் இத்தாலியின் சர்டினியா நகரில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தார்.

நீச்சல் குளத்தில் மூழ்கிய கால்பந்து வீரர்

இந்நிலையில், அந்த ஓட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் யேல் டிரெப்பி நேற்று குளித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக யேல் டிரெப்பி தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதையடுத்து அவரை மீட்ட ஓட்டல் ஊழியர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது உடல்நிலை மோசமான நிலையில் ஹெலிகாப்டர் மூலம் சர்டினியாவில் உள்ள வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

யேல் டிரெப்பி தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்து வரும் நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.