போஸ்டன்,
2026 பிபா (FIFA) உலகக்கோப்பை காலிறுதி போட்டியில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக (2018, 2022, 2026) உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
போஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கடுமையாக போராடின. ஆட்டத்தின் தொடக்கத்தில் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், கேப்டன் கிலியன் எம்பாப்பே அதை கோலாக மாற்ற தவறினார். இதனால் முதல் பாதி கோல் ஏதுமின்றி 0-0 என்ற சமநிலையுடன் நிறைவடைந்தது.
இரண்டாம் பாதியில் தாக்குதல் ஆட்டத்தை தீவிரப்படுத்திய பிரான்ஸ் அணி 60-வது நிமிடத்தில் முன்னிலை பெற்றது. டெசிரே டூயே வழங்கிய துல்லியமான பாஸை சிறப்பாக பயன்படுத்திய கேப்டன் கிலியன் எம்பாப்பே முதல் கோலை அடித்தார்.
இதன் பின்னர் 66-வது நிமிடத்தில் எம்பாப்பே வழங்கிய அபாரமான அசிஸ்டை உஸ்மானே டெம்பேலே கோலாக மாற்றினார். இதன் மூலம் பிரான்ஸ் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு மொராக்கோ பல வாய்ப்புகளை உருவாக்கினாலும், அவற்றை கோலாக மாற்ற முடியாததால் தோல்வியை தழுவியது.
இந்த தோல்வியின் மூலம் இந்த உலகக்கோப்பை தொடரில் எஞ்சியிருந்த கடைசி ஆப்பிரிக்க அணியான மொராக்கோ வெளியேறியது. அரையிறுதியில் பிரான்ஸ் அணி, ஸ்பெயின் - பெல்ஜியம் அணிகளுக்கு இடையேயான காலிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் பிரான்ஸ் கேப்டன் கிலியன் எம்பாப்பே பல முக்கிய சாதனைகளை படைத்துள்ளார். நடப்பு உலகக்கோப்பையில் அவர் அடித்த கோல்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கோல்டன் பூட் பட்டியலில் 8 கோல்களுடன் அர்ஜென்டினா நட்சத்திரம் லியோனல் மெஸ்சியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், உலகக்கோப்பை வரலாற்றில் எம்பாப்பே அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. 21 கோல்களுடன் முதலிடத்தில் உள்ள லியோனல் மெஸ்ஸியை விட, எம்பாப்பே தற்போது ஒரு கோல் மட்டுமே பின்தங்கியுள்ளார்.