சென்னை,
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி தெரிவித்துள்ளார்.
பிரேசில் பயிற்சியாளர் அன்செலோட்டி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
’’நெய்மார் விளையாட தயாராக இருக்கிறார். அணிக்கு எப்போது தேவையோ, அப்போது அவரை நான் களம் இறக்குவேன். அவர் கண்டிப்பாக முழுமையாக 90 நிமிடங்களும் விளையாடக்கூடிய தகுதியுடன் தான் இருக்கிறார்" என்றார்.
மேலும், அவர் பெஞ்சில் அமர்ந்திருக்க விரும்பவில்லை என்பதும், விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கிறார் என்பதும் அவரது பயிற்சியின் மூலம் தெளிவாக தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காயம் காரணமாக இந்த உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று ஆட்டங்களில் நெய்மர் மாற்று வீரராக மிகக் குறைந்த நேரம் மட்டுமே களம் இறங்கினார். தற்போது நெய்மார் முழுமையாகக் குணமடைந்துள்ளதால், நாக்-அவுட் சுற்றில் பிரேசில் அணிக்கு அவர் மிகப்பெரிய பலமாக அமைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை நடக்கவிருக்கும் விறுவிறுப்பான ரவுண்ட் ஆப் 16 போட்டியில், பலம் வாய்ந்த நார்வே அணியை பிரேசில் எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி கால் இறுதிக்கு தகுதி பெறும்.