பார்சிலோனா,
லா லிகா கால்பந்து தொடரில் நடைபெற்ற ஆட்டத்தில், ராயோ வலேகானோ அணியை 5-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பார்சிலோனா அணி அபார வெற்றி பெற்றது.
ஸ்பாட்டிபை கேம்ப் நூ மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், 12-வது நிமிடத்திலேயே செர்ஜியோ கேமலோ கோல் அடித்து ராயோ அணியை 1-0 என முன்னிலை பெற செய்தார்.
இந்த சீசனில் லா லிகா தொடரில் பார்சிலோனா அணி எதிரணியிடம் இருந்து கோல் வாங்கியது இதுவே முதல்முறையாகும்.
இதற்கு பார்சிலோனா அணி உடனடியாக பதிலடி கொடுத்தது. 19-வது நிமிடத்தில் ரபின்ஹா கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். இதன்பின்னர் பார்சிலோனா அணி தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 29-வது நிமிடத்தில் லாமின் யமால் கோல் அடித்து 2-1 என முன்னிலைப்படுத்தினார்.
முதல் பாதி முடிவில் பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து இரண்டாவது பாதி தொடங்கிய 6-வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் முன்னிலை மேலும் அதிகரித்தது. 51-வது நிமிடத்தில் கார்டன் அடித்த பந்து, ராயோ அணியின் புளோரியன் லெஜியூனின் காலில் பட்டு சொந்த கோலாக மாறியது. இதனால் பார்சிலோனா 3-1 என முன்னிலை பெற்றது.
எனினும், ராயோ வாலேகானோ அணி விடாமல் போராடியது. இதன் பலனாக 59-வது நிமிடத்தில் செர்ஜியோ கேமலோ மீண்டும் கோல் அடித்து ஆட்டத்தை 3-2 என மாற்றினார்.
இருப்பினும் பார்சிலோனா அணி தனது தாக்குதல் ஆட்டத்தை விடவில்லை. 71-வது நிமிடத்தில் ரபின்ஹா தனது 2-வது கோலை அடித்து பார்சிலோனாவின் முன்னிலையை 4-2 என உயர்த்தினார். தொடர்ந்து ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் லாமின் யமால் தனது 2-வது கோலை அடித்தார். இறுதியில் ஆட்ட நேர முடிவில் பார்சிலோனா அணி 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.