தெஹ்ரான்
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து தோற்று வெளியேறிய அமெரிக்காவை கிண்டல் செய்து ஈரான் பதிவிட்டு உள்ளது.
23-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தி வருகின்றன. இவற்றில் லீக் மற்றும் 2-வது சுற்று போட்டிகள் (நாக்-அவுட் சுற்று) முடிவடைந்து 16 அணிகள் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. தற்போது 3-வது சுற்று போட்டிகள் தொடங்கியுள்ளன.
இதில், இன்று காலை சியாட்டிலில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்கா, பெல்ஜியம் அணிகள் விளையாடின. இந்த போட்டியில், பெல்ஜியம் அணியிடம் 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்கா தோற்றது. இதனால், போட்டி நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்கா காலிறுதி போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறியது.
ஈரானின் தேசிய கால்பந்து அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் ஊடகம் வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்கா 1 கோலுடனும், பெல்ஜியம் 4 கோல்களுடனும் உள்ள 3-வது சுற்று ஆட்டம் தொடர்பான பதிவையும், லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் மற்றும் ஈரான் கோல்கள் எதுவும் இன்றி இருந்த மற்றொரு பதிவையும் வெளியிட்டு உள்ளது. அதற்கு கீழே, வாங்க, நாம் ஒன்றாக சேர்ந்து ஆடுவோம்... என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஆண்டு தொடக்கத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா வான்வெளி தாக்குதல் நடத்தியது. அந்நாட்டுடன் இஸ்ரேலும் இணைந்து கொண்டது. இந்த தாக்குதலில் ஈரானில் ஆயிரக்கணக்கானோல் பலியாகி உள்ளனர். இந்த சூழலில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்து வருகிறது.
இந்த சூழலில், உலகக்கோப்பையில் தோற்று வெளியேறிய அமெரிக்காவை கேலி செய்யும் வகையில், ஈரான் இந்த பதிவை வெளியிட்டு உள்ளது. ஈரானும் போட்டியில் இருந்து முன்பே வெளியேறி விட்டது. அப்போது, போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்கா, ஒரு வழியாக நாட்டில் இருந்து ஈரான் கால்பந்து அணியை வெளியேற்றி விட்டோம் என அமெரிக்கா கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.