டல்லாஸ்,
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிக்கு முந்தைய (ரவுண்ட் ஆப் 16) ஆட்டத்தில் போர்ச்சுகலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், காலிறுதிக்கு முன்னேறியது.
வெற்றியை உறுதி செய்த மிக்கேல் மெரினோ
இந்திய நேரடிப்படி இரவு 12.30 மணிக்கு டெக்சாஸில் உள்ள டல்லாஸ் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இரு அணிகளும் தொடக்கம் முதல் கடுமையாக போராடிய நிலையில், முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியிலும் கடைசி நிமிடங்கள் வரை எந்த கோலும் பதிவாகவில்லை. அப்போது ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் அணியில் மாற்று வீரராக களமிறங்கிய மிக்கேல் மெரினோ கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.
கண்ணீர் விட்ட ரொனால்டோ
2006-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் முதன்முறையாக களமிறங்கிய ரொனால்டோ, இந்த தொடரே தனது கடைசி உலகக் கோப்பை என்று போட்டிக்கு முன்பே அறிவித்திருந்தார். அதனால், இப்போட்டியில் இறுதி விசில் ஒலித்ததும் உலகக் கோப்பை கனவு முடிவுக்கு வந்ததை உணர்ந்த அவர், மைதானத்திலேயே கண்ணீரை அடக்க முடியாமல் உணர்ச்சிவசப்பட்டார்.மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி ரொனால்டோவுக்கு மரியாதை செலுத்தினர்.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி 0-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியடைந்து உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது. போர்ச்சுக்கலுக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடிய கடைசி உலகக் கோப்பை ஆட்டம் இதுவாகும்.
உலக கோப்பை தொடரில் இருந்து போர்ச்சுகல் வெளியேறியதை தொடர்ந்து, அந்த அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராபர்டோ மார்ட்டினஸ் விலகி உள்ளார்.
ஸ்வான்சீ, விகான் மற்றும் எவர்டன் அணிகளின் முன்னாள் பயிற்சியாளரான மார்டினெஸ், 2016 முதல் 2022 வரை பெல்ஜியம் அணியையும், 2023 முதல் போர்ச்சுகல் அணியையும் வழிநடத்தினார்.
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இவர், 2018 உலகக் கோப்பையில் பெல்ஜியம் அணியை அரையிறுதி வரை அழைத்துச் சென்றார் (அங்கு பிரான்ஸிடம் தோல்வியடைந்தது), ஆனால் 2022-ல் குழு நிலையிலேயே (group stage) வெளியேறியது.
கடந்த ஆண்டு போர்ச்சுகல் அணியுடன் 'நேஷன்ஸ் லீக்' பட்டத்தை வென்ற அவர், இந்த உலகக்கோப்பை வெளியேற்றத்திற்குப் பிறகு பதவியிலிருந்து விலகுகிறார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “உலகக் கோப்பையை வெல்லும் நோக்கத்துடனேயே நான் போர்ச்சுகலுக்கு வந்தேன். அதை வெல்ல முடியாத நிலையில், தொடர்ந்து நீடிப்பது அர்த்தமற்றது. எனது ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைகிறது.
நான் பெருமிதம் கொள்கிறேன். நான் 45 ஆட்டங்களில் விளையாடியுள்ளேன். போர்ச்சுகலில் நான் அன்புடன் வரவேற்கப்பட்டேன். இந்த நினைவை நான் எப்போதும் என்னுடன் வைத்திருப்பேன். இது மகிழ்ச்சியும் பெருமையும் அதே சமயம் பொறுப்பும் கலந்த ஒரு அனுபவமாக இருந்தது. இது கடினமானதாக இருந்தாலும், ஒரு காலகட்டத்தின் நிறைவு இது. தற்போதைய சூழலில் இது மிகவும் பொருத்தமான முடிவாகவே தோன்றுகிறது.
உலகக் கோப்பையின் மிகவும் திறமையான அணிகளில் ஒன்றாக போர்ச்சுகல் திகழ்ந்தது. நடுக்களத்தில் விட்டினா, ஜோவோ நெவ்ஸ் மற்றும் புருனோ பெர்னாண்டஸ் ஆகியோரும், தாக்குதல் ஆட்டத்தில் ரொனால்டோவும் இருந்தனர். ஆனால், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெளியேறியது ஒரு தோல்வி அல்ல.
"நாங்கள் தோல்வியடையவில்லை". வெற்றிக்கு வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றிற்கு எதிராக நாங்கள் ஒரு ஆட்டத்தில் தோற்றோம். நாங்கள் நம்பமுடியாத தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்தினோம். பெரிய அணிகளுக்கு எதிரான பெரிய ஆட்டங்களில், வெற்றி தோல்வி என்பது நுணுக்கங்களைப் பொறுத்தது... நீங்கள் வெற்றி பெற முயற்சிக்காதபோது தோல்வியடைகிறீர்கள், நாங்கள் கடைசி நிமிடம் வரை வெற்றி பெற முயற்சித்தோம் என்று அவர் கூறினார்.