கால்பந்து

பிரான்சை வீழ்த்திய ஸ்பெயின் அணி; மீண்டும் ஒரு கனவு நனவானது: பிரதமர் வாழ்த்து

போட்டியின் முதல் பாதியில் 22-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

மாட்ரிட்

பிரான்ஸ் அணியை அரையிறுதியில் வீழ்த்தி, ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

பிரதமர் வாழ்த்து

உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் பரபரப்பான இறுதி கட்டத்திற்கு சென்றுள்ளது. அரையிறுதி போட்டி ஒன்றில், ஸ்பெயின் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதற்கு, ஸ்பெயின் அணியின் பிரதமர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அவர் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், இறுதிப்போட்டிக்கு முன்னேறியது அதிக உற்சாகம் தருகிறது. ஸ்பெயின் கால்பந்து அணி, மீண்டும் ஒரு கனவை உருவாக்கி உள்ளது. அணி வீரர்களே முன்னேறுங்கள் என அவர் பதிவிட்டு உள்ளார்.

அதற்கு முன்பு, அமெரிக்காவின் டல்லாஸ் ஸ்டேடியத்தில் நடந்த அரையிறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் அணிகள் விளையாடின.

பெனால்டி வாய்ப்பு

போட்டியின் முதல் பாதியில் 22-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்தி ஸ்பெயின் வீரர் மிகெல் ஒயார்சபால் கோல் அடித்தார். இதனால் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இரண்டாம் பாதியிலும் ஸ்பெயின் அணியின் கையே ஓங்கியிருந்தது. எதிர் அணியை கோல் அடிக்க விடாமல் தடுத்ததுடன், அடுத்த கோல் வாய்ப்பையும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அப்போது போட்டியின் 58-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் பெட்ரொ பொர்ரோ அணிக்கான 2-வது கோலை போட்டார். இதனால், பிரான்ஸ் அணி வீரர்கள் சோர்வடைந்தனர். எனினும், விடாமல் கோல் அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்திலும் கோல் அடிக்கப்படவில்லை. ஆனால், ஆட்ட நேர முடிவில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்சை வீழ்த்தி ஸ்பெயின் வெற்றி பெற்றது.