சென்னை,
இதுதான் தனது கடைசி உலகக் கோப்பை கால்பந்து தொடர் என ரொனால்டோ கூறி இருக்கிறார்.
ஸ்பெயின் - போர்ச்சுகல்
23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா அமெரிக்கா, மெக்சிகோ,கனடா ஆகிய நாடுகளில் நடந்து வருகிறது. லீக் மற்றும் 2-வது சுற்று முடிவில் 16 அணிகள் 3-வது சுற்றை எட்டியுள்ளன. தற்போது 3-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட்) தொடங்கியுள்ளது.
நாளை 'சுற்று-16' (Round of 16) ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியை ரொனால்டோவின் போர்ச்சுகல் எதிர்கொகொள்கிறது
டல்லாஸ் கவ்பாய்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி, ரொனால்டோவின் கடைசி உலகக் கோப்பை தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இப்போட்டிக்கு முன்னதாக நடந்த செய்தியாளர் சந்திப்பில், ரொனால்டோ கலந்துகொண்டார். அப்போது, தனது மீதான விமர்சனங்களுக்கு அவர் மிகவும் ஆவேசமாகவும் உணர்ச்சிகரமாகவும் பதிலளித்தார்.
"நான் மோசமாக விளையாடவில்லை"
தற்போதைய பார்ம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரொனால்டோ,
"நான் முன்பு இருந்ததை போன்ற வீரர் இப்போது இல்லை. ஆனால் அதற்காக நான் மோசமாக விளையாடுகிறேன் என்று அர்த்தமில்லை. இந்த உலகக் கோப்பையில் ஏற்கனவே 3 கோல்கள் அடித்துள்ளேன். எனக்கு 18 வயது இருந்தபோதிலிருந்தே இதுபோன்ற விமர்சனங்கள் இருந்து வருகின்றன. அது இனியும் மாறப்போவதில்லை,"
என்றார்.
"அணிக்காக முழுமையாக அர்ப்பணிப்பேன்"
தொடர்ந்து பேசிய அவர்,
"நான் களத்தில் விளையாடினாலும், விளையாடாவிட்டாலும், அணியின் இலக்குகளை அடைய என் உடலையும், ஆன்மாவையும் அர்ப்பணிப்பேன். இந்த அணியில் எனக்கு எப்போதும் ஒரு முக்கியமான பங்கு இருக்கும். நான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்வேன். நீங்கள் அல்ல. எப்போதும் இதே கேள்வியைத்தான் கேட்கிறீர்கள்,"
என்று தெரிவித்தார்.
"23 ஆண்டுகளாக என்னை வீழ்த்த முயற்சிக்கிறீர்கள்"
"கடந்த 23 ஆண்டுகளாக நீங்கள் என்னை விமர்சனங்களால் வீழ்த்த முயற்சித்து வருகிறீர்கள். ஆனால் அதில் எந்த பயனும் இல்லை என்பதை நீங்களே பார்த்திருக்கிறீர்கள். என்னை விமர்சிப்பது உங்கள் நேரத்தை வீணடிக்கும் செயல்தான். இருந்தாலும் அதை மீண்டும் மீண்டும் செய்கிறீர்கள். இதற்கெல்லாம் நான் பழகிவிட்டேன். இது என் கடைசி உலகக் கோப்பை கால்பந்து தொடராக இருக்கலாம். ஆனால், நாளைய ஆட்டம் கடைசியாக இருக்க கூடாது என்று நம்புகிறேன்,"
என்று கூறினார்.
"விமர்சனங்கள்தான் வளர்ச்சியைத் தரும்"
மேலும் அவர்,
"நான் உலகக் கோப்பையை வென்றாலும், வெல்லாவிட்டாலும், நான் கிறிஸ்டியானோ ரொனால்டோதான். வயது மனிதனுக்கு முதிர்ச்சியையும், வாழ்க்கையை பக்குவமாக அணுகும் அனுபவத்தையும் தருகிறது. 40 வயதை கடந்த பிறகும் என் மீது விமர்சனங்கள் வருவது எனக்கு மகிழ்ச்சிதான். ஏனெனில், விமர்சனங்கள்தான் உங்களை மேலும் வளர செய்கின்றன,"
என்று தெரிவித்தார்.