மியாமி,
பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து 2-வது சுற்று ஆட்டங்கள் (நாக்-அவுட் சுற்றுகள்) பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், அதிகாலை 3.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அர்ஜென்டினா மற்றும் கேப் வெர்தே அணிகள் விளையாடின.
அமெரிக்காவின் மியாமி மைதானத்தில் நடந்த போட்டியின் முதல் பாதியில் அர்ஜென்டினா அணியின் மெஸ்சி 29-வது நிமிடத்தில் ஒரு கோல் போட்டார். அதன்பின்னர் கோல் அடிக்கப்படவில்லை. இதனால், போட்டியின் முதல் பாதியில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் இரண்டாம் பாதி தொடங்கிய சிறிது நேரத்தில், 59-வது நிமிடத்தில் கேப் வெர்தே அணி வீரர் டெராய் டுவார்டே ஒரு கோல் அடித்தார். இதனால் 1-1 என்ற கணக்கில் போட்டி சமன் அடைந்தது. இதன் பின்னர் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதில் 92-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் லிசாண்ட்ரோ மார்டினெஸ் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து 103-வது நிமிடத்தில் கேப் வெர்தே வீரர் சிட்னி லோபஸ் கப்ரல் ஒரு கோல் அடித்து 2-2 என்ற கணக்கில் போட்டியை மீண்டும் சமன் செய்தார்.
ஆட்டத்தின் 111-வது நிமிடத்தில் கேப் வெர்தே வீரர் டினே போர்ஜெஸ், துரதிருஷ்டவசமாக தனது சொந்த அணிக்கே கோல் அடித்துவிட்டதால், 3-2 என்ற கணக்கில் கேப் வெர்தே அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் உலக்கோப்பை தொடரில் இருந்து கேப் வெர்தே வெளியேறியது. இருப்பினும், வெறும் 5 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சிறிய ஆப்பிரிக்க நாடான கேப் வெர்தே, கால்பந்து உலகில் ஜாம்பவானாக திகழும் அர்ஜெண்டினா அணிக்கு எதிராக திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோதும், இறுதியில் சொந்த கோல் காரணமாக தோல்வியை தழுவியது.
நடப்பு சாம்பியன்களை உச்சகட்ட டென்ஷனுக்கு தள்ளியதன் மூலம், அந்த ஆப்பிரிக்க அணி உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களைக் கவர்ந்தது. அந்த நம்பமுடியாத முயற்சியின் காரணகர்தாவாக அந்த அணியின் மூத்த கோல்கீப்பர் வோசின்ஹா இருந்தார். அவரது தொடர்ச்சியான அற்புதமான தடுப்புகள் நீண்ட நேரத்திற்கு அர்ஜென்டினாவை விரக்தியடைய செய்தன.
இந்நிலையில் லியோனல் மெஸ்ஸி குறித்து கேப் வெர்டே கோல் கீப்பர் மனம் திறந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “"போட்டி முடிந்த பிறகு நான் மெஸ்ஸியிடம் சென்றேன். அவர் என்னைக் கட்டிப்பிடித்து, நீங்கள் சிறந்தவர். கேப் வேர்டேக்கு நீங்கள் பெருமை சேர்த்துள்ளீர்கள் என்று கூறினார். என்னால் நம்ப முடியவில்லை. இதை மெஸ்ஸியிடம் இருந்து கேட்பது எனக்கு மிகப்பெரிய விஷயம். நீங்கள் எப்போதுமே சிறந்தவர் மெஸ்ஸி. இது போன்ற தருணங்கள் ஒருவரின் இதயத்தில் என்றென்றும் பசுமையாகப் பதிந்துவிடுகின்றன" என்று அந்த உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பை வொஜின்கா நினைவுகூர்ந்தார்.
அந்த மறக்க முடியாத உரையாடல் அத்துடன் முடிந்துவிடவில்லை. உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் தொடர்ந்து 8 ஆட்டங்களில் கோல் அடித்த மெஸ்ஸியிடம், நாம் சட்டைகளை மாற்றிக்கொள்ள முடியுமா என்று வோசின்ஹா கேட்டார், மெஸ்ஸியும் மகிழ்ச்சியுடன் அதற்கு சம்மதித்தார்.
அர்ஜென்டினா அணி 'ரவுண்ட் ஆப் 16' (Round of 16) சுற்றுக்கு முன்னேறிய நிலையில், கேப் வெர்டே அணி பெருமிதத்துடன் உலக கோப்பையிலிருந்து விடைபெற்றது. கால்பந்தின் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றுக்கு எதிராக அவர்கள் வெளிப்படுத்திய அச்சமற்ற ஆட்டம் உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்றது.