மியாமி,
உலகக் கோப்பை கால்பந்தில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பிரான்ஸ்- இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்துகின்றன.
23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் இது வரை 102 ஆட்டங்கள் முடிந்து விட்டன. இன்னும் இரு ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.
இதில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 2.30 மணிக்கு மியாமியில் அரங்கேறும் 3-வது இடத்தை நிர்ணயிக்கும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பிரான்சும், இங்கிலாந்தும் மோதுகின்றன.
கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணியாக கணிக்கப்பட்டிருந்த பிரான்ஸ் லீக் சுற்றில் 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்ததோடு, 2-வது சுற்றில் சுவீடனையும் (3-0) 3-வது சுற்றில் பராகுவேயையும் (1-0), கால்இறுதியில் மொராக்கோவையும் (2-0) போட்டுத் தாக்கியது. ஆனால் அரை இறுதியில் 0-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோற்று தொடர்ந்து 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தது. எம்பாப்பேக்கு தனிப்பட்ட முறையில் இந்த ஆட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இதுவரை 8 கோல்கள் அடித்து, 3 கோலுக்கு உதவி புரிந்துள்ள எம்பாப்பே, தங்க ஷூ விருதுக்கான போட்டியில் மெஸ்சியுடன் (8 கோல்) சமநிலையில் உள்ளார். அந்த வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள ஒன்றிரண்டு கோல்கள் அடிக்க வேண்டியது அவசியமாகும். இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் பிரான்ஸ் வீரர்கள் நெருக்கடியின்றி ஆக்ரோஷமாக ஆடுவார்கள் என்று நம்பலாம்.
ஹாரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் லீக் சுற்றில் தோல்வியே சந்திக்காமல் நாக்-அவுட் சுற்றை எட்டியது. 2-வது சுற்றில் காங்கோவையும் (2-1), 3-வது சுற்றில் மெக்சிகோவையும் (3-2), கால்இறுதியில் நார்வேயையும் (2-1) விரட்டியது. அர்ஜென்டினாவுக்கு எதிரான அரைஇறுதியில் 1-0 என முன்னிலை கண்ட இங்கிலாந்து கடைசி 10 நிமிடங்கள் அடுத்தடுத்து இரு கோல் வாங்கி 60 ஆண்டுக்கு பிறகு இறுதிப்போட்டிக்குள் செல்லும் அரிய வாய்ப்பை நழுவ விட்டது.
உலகக் கோப்பையை உயரிய நிலையில் முடிப்பதில் முனைப்பு காட்டும் இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்தால் 1966-ம் ஆண்டுக்கு பிறகு அவர்களின் சிறந்த செயல்பாடாக அமையும். ஆனால் அந்த நிலையை எட்ட நட்சத்திர வீரர்கள் கேப்டன் ஹாரி கேன் (6 கோல்), பெல்லிங்ஹாம் (6 கோல்) ஆகியோர் கைகொடுக்க வேண்டியது முக்கியம். 3-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.279 கோடியும், 4-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ.260 கோடியும் பரிசாக கிடைக்கும்
சர்வதேச கால்பந்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 32 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 17-ல் இங்கிலாந்தும், 10-ல் பிரான்சும் வெற்றி பெற்றன. 5 ஆட்டங்கள் டிரா ஆனது. கடைசியாக 2022-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்இறுதியில் சந்தித்தன. அதில் பிரான்ஸ் 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.