புதுடெல்லி,
20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை நடக்கிறது. இதன் ஆக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் 12 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. நடப்பு சாம்பியன் இந்தியா 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஜப்பான். தென்கொரியா, வங்காளதேசம், இலங்கை, இந்தோனேசியா ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.
ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்திய அணி தனது லீக் ஆட்டங்களில் இந்தோனேசியாவை செப்டம்பர் 20-ந்தேதியும், இலங்கையை 22-ந்தேதியும், தென்கொரியாவை 24-ந்தேதியும், ஜப்பானை 26-ந்தேதியும், வங்காளதேசத்தை 28-ந்தேதியும் எதிர்கொள்கிறது.
ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்மன்பி ரீத் சிங் கேப்டனாக நீடிக்கிறார். அடுத்த மாதம் நடைபெறும் உலகக் கோப்பை ஆக்கி போட் டிக்கான அணியில் இடம் பெற்று இருக்கும் ஆதித்யா அர்ஜூனுக்கு பதிலாக ராஜ்குமார் பால் சேர்க்கப்பட்டுள்ளார். மற்ற வீரர்கள் அப்படியே இடம் பெற்றுள்ளனர்.
இந்திய அணி வருமாறு:-
மொகித், சுராஜ் கார்கெரா (கோல் கீப்பர்கள்), ஜர்மன்பிரீத் சிங், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்). அமித் ரோஹிதாஸ், ஜூக்ராஜ் சிங், சஞ்சய், சுமித், யாஷ்தீப் சிவாச் (பின்களம்), ரஜிந்தர் சிங், ராஜ்குமார் பால், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், நீலகண்ட ஷர்மா, விவேக்சாகர் பிரசாத் (நடுக ளம்). தில்பிரீத் சிங், ஷிலானந்த் லக்ரா. சுக்ஜீத் சிங், மன்தீப் சிங், அபிஷேக் (முன்களம்).
அணி அறிவிப்புக்கு பிறகு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கிரேக் புல்டான் கூறுகையில், 'ஆசிய விளையாட்டு போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி அனுபவம் வாய்ந்தது. ஜப்பானில் விளையாடும் சவாலை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். ஆசிய விளையாட்டில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்சில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். ஆசிய விளையாட்டில் வாகை சூடி ஒலிம்பிக்குக்கு தகுதி பெறுவதே எங்களது இலக்காகும்' என்றார்.