ஆம்ஸ்டல்வீன்,
ஆண்கள் ஆக்கி உலகக்கோப்பை 2026 தொடரில் நெதர்லாந்து அணியிடம் 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது. இதனால், நாளை ஆம்ஸ்டல்வீனில் நடைபெறும் அர்ஜென்டினாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தற்போது ‘ஈ’ பிரிவில் நெதர்லாந்து அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அணிகள் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. இந்திய அணி இதுவரை புள்ளிகள் ஏதும் பெறாமல், -4 கோல் வித்தியாசத்துடன் கடைசி இடத்தில் உள்ளது.
இந்திய அணி அர்ஜென்டினாவை வீழ்த்துவதுடன், மற்றொரு போட்டியின் முடிவும் சாதகமாக அமைய வேண்டும்.
3 கோல் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியா, அர்ஜென்டினாவை குறைந்தது 3 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இதன் மூலம் இந்தியாவின் கோல் வித்தியாசம் -1 ஆகவும், அர்ஜென்டினாவின் கோல் வித்தியாசம் -3 ஆகவும் மாறும்.
அதே நேரத்தில், நெதர்லாந்து அணி இங்கிலாந்தை குறைந்தது 2 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அப்போது இந்தியா, இங்கிலாந்து, அர்ஜென்டினா ஆகிய அணிகள் தலா 3 புள்ளிகளுடன் இருக்கும் நிலையில், கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்து அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
4 கோல் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியா அர்ஜென்டினாவை 4 கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தினால், நெதர்லாந்து - இங்கிலாந்து ஆட்டத்தின் முடிவு எவ்வாறு அமைந்தாலும் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
ஆனால், நெதர்லாந்து - இங்கிலாந்து போட்டி டிராவில் முடிந்தால், இங்கிலாந்து 4 புள்ளிகளைப் பெற்று இந்தியாவின் அரையிறுதி கனவை முடிவுக்கு கொண்டு வரும்.
இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் இதுவரை 6 கோல்கள் அடித்துள்ளார். இதன் மூலம் அர்ஜென்டினாவின் டோமஸ் டொமெனுடன் இணைந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
இந்திய அணியின் முக்கிய பலமாக பெனால்டி கார்னர் வாய்ப்புகள் இருந்தாலும், பீல்டு கோல்கள் அடிப்பது அணிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதுவரை அபிஷேக் 2 கோல்களும், தில்பிரீத் சிங் 1 கோலும் அடித்துள்ளனர்.
அர்ஜென்டினாவுக்கு எதிரான வாழ்வா-சாவா போட்டியில் இந்தியாவின் முன்கள வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகியுள்ளது.