பிற விளையாட்டு

ஈரோட்டில் தேசிய குதிரையேற்ற போட்டி

ஈரோட்டில் நடைபெற்ற தேசிய குதிரையேற்ற போட்டிகளில் மொத்தம் 74 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு திறமையை வெளிக்காட்டினர்.

ஷோ ஜம்பிங், டிரஸ் சேஜ், போல் பென்டிங், பேரல் ரேஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

ஈரோடு,

ஈரோடு திண்டலில் உள்ள குதிரையேற்ற பயிற்சி மையத்தில் தேசிய அளவிலான குதிரையேற்ற போட்டி நேற்று தொடங்கியது. பல்வேறு வகையான பிரிவுகளில் நடத்தப்படும் இந்த போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, அசாம், மராட்டியம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்பட பல மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஷோ ஜம்பிங், டிரஸ் சேஜ், போல் பென்டிங், பேரல் ரேஸ் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் மொத்தம் 74 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு திறமையை வெளிக்காட்டினர். அப்போது தடையின்றி குதிரையை ஒட்டி செல்வது. வேகத்தை உரிய நேரத்தில் கட்டுப்படுத்துவது, திருப்பும்போது நேர்த்தியாக செயல்படுவது உள்ளிட்டவற்றில் குதிரைகளின் துல்லியமான செயல்பாட்டை நடுவர்கள் கண்காணித்து வீரர்களுக்கு மதிப்பெண் வழங்கினர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாளாக போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு மாலையில் பரிசு வழங்கப்படும். நாளை ஈரோடு கங்காபுரத்தில் குதிரைப் பந்தயம் நடக்கிறது. இந்த பந்தயம் 40 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும்.