மணிலா,
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 16-வது இடம் வகிக்கும் சீனாவின் வாங் ஸி யிய் 15-21, 21-13, 21-19 என்ற செட் கணக்கில் 2-ம் நிலை வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சிக்கு (ஜப்பான்) அதிர்ச்சி அளித்து மகுடம் சூடினார்.
இந்த ஆட்டம் 1 மணி 18 நிமிடங்கள் நீடித்தது. 22 வயதான வாங் ஸி தனது பேட்மிண்டன் வாழ்க்கையில் வென்ற மிகப்பெரிய பட்டம் இதுவாகும். முன்னதாக யமாகுச்சி அரைஇறுதியில் சர்ச்சைக்கு இடையே இந்தியாவின் பி.வி.சிந்துவை தோற்கடித்திருந்தார். அரைஇறுதியில் தோல்வி கண்ட பி.வி.சிந்து, தென்கொரியாவின் அன் செயோங் ஆகியோர் வெண்கலப்பதக்கம் பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் 7-ம் நிலை வீரர் மலேசியாவின் லீ ஸி ஜியா 21-17, 23-21 என்ற நேர் செட் கணக்கில் ஜோனதன் கிறிஸ்டியை (இந்தோனேஷியா) தோற்கடித்து சாம்பியன் கோப்பையை வசப்படுத்தினார்.