புதுடெல்லி,
டெல்லியில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ரைபிள் மற்றும் பிஸ்டல் பிரிவுகளில் தனிநபருக்கான ஆடவர், மகளிர் மற்றும் கலப்பு குழு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் 20 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் கலப்பு குழு போட்டி ஒன்றில், இந்தியாவின் இளவேனில் வாலறிவன் மற்றும் அர்ஜுன் பபுதா இணை தொடக்கம் முதல் வலுவாக செயல்பட்டது.
போட்டியில் இளவேனில் மொத்தம் 253.4 புள்ளிகளையும் அர்ஜுன் 251.6 புள்ளிகளையும் பெற்று ஒட்டுமொத்தத்தில் அந்த இணை 505.0 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து, தங்க பதக்கமும் வென்றது.
இதுவரை 34 தங்கம், 12 வெள்ளி மற்றும் 8 வெண்கலம் என மொத்தம் 54 பதக்கங்களை வென்று பதக்க பட்டியலில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.