பிற விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல்; 25 மீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு 2 தங்கம்

சீனியர் பிரிவு மட்டுமின்றி ஜூனியர் பிரிவிலும் 3 பதக்கங்களையும் இந்தியா வென்றது.

புதுடெல்லி,

டெல்லியில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ரைபிள் மற்றும் பிஸ்டல் பிரிவுகளில் தனிநபருக்கான ஆடவர், மகளிர் மற்றும் கலப்பு குழு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மொத்தம் 20 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

இதில், ஆடவர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் சீனியர் மற்றும் ஜூனியர் அளவிலான போட்டிகளில் இந்தியாவுக்கு 2 தங்க பதக்கங்கள் கிடைத்தன.

சீனியர் பிரிவில், இந்தியாவை சேர்ந்த குர்பிரீத் சிங் திறமையாக விளையாடி தங்கம் வென்றார். இதனை தொடர்ந்து, சக வீரர்களான ஹர்ஷ் குப்தா மற்றும் அமன்பிரீத் சிங் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை தட்டி சென்றனர்.

சீனியர் பிரிவு மட்டுமின்றி ஜூனியர் பிரிவிலும் 3 பதக்கங்களையும் இந்தியா வென்றது. ஜூனியர் பிரிவில் இந்தியாவின் சூரஜ் சர்மா தங்க பதக்கம் வென்றார். முகேஷ் நெலவல்லி வெள்ளி பதக்கமும், தனிஷ்க் முரளிதர் நாயுடு வெண்கல பதக்கமும் வென்றனர். இனி மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டிகள் இன்று நடைபெறும்.