தாஷ்கென்ட்,
15 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது. இதில் 15 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பதக்க வேட்டையில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.
இந்த பிரிவில் இந்தியா 9 தங்கம், 6 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்களை அறுவடை செய்தது. இதன் பெண்கள் பிரிவில் 7 தங்கம் உள்பட 14 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. ஆண்கள் பிரிவில் 2 தங்கம் உள்பட 13 பதக்கங்களை பெற்றது.
இதன் 37 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை அன்ஜீ 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் நுர்ஜானத் பெகாசரை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். மற்ற இந்திய வீராங்கனைகளான சோனியா (40 கிலோ), தன்வி (43 கிலோ), ஹன்சிகா அட்ரி (46 கிலோ), சுனைனா (58 கிலோ), பூமிகா (61 கிலோ), ஏஞ்சல் (70 கிலோ) ஆகியோர் தங்கப்பதக்தை கைப்பற்றினர்.
ஆண்கள் பிரிவில் யாஷ் குமார் (33 கிலோ), முகமது யாசீர் (58 கிலோ) தங்கப்பதக்கம் வென்றனர்.